தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு எதிராகவும், எஸ்.பி.வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.இதன் காரணமாக, எஸ்.பி.வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு எஸ்.பி.வேலுமணி தரப்பும் மாறி மாறி சபாநாயகரிடம் மனுக்களை அளித்தனர். இதற்கிடையே, அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பும், எஸ்.பி.வேலுமணி தரப்பும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இருதரப்பு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமைச் செயலகத்திற்கு வந்து, சபாநாயகரிடம் தாங்கள் கொடுத்திருந்த மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “தேர்தல் முடிந்த பிறகு சில கருத்து வேறுபாடுகளால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில முடிவுகளை எடுத்தோம்.எங்கள் தரப்பை சேர்ந்த 25 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் மனு கொடுத்தார்கள். நாங்களும் அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு கொடுத்திருந்தோம். இருவரும் நாங்கள் கொடுத்த மனுக்களை வாபஸ் பெற்று விட்டோம். அந்த கடிதத்தை பேரவை தலைவரிடம் கொடுத்துள்ளோம். எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தான். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி தான். தோல்விக்கு பிறகு நாங்கள் சில கருத்துக்களை முன்வைத்திருந்தோம். அதிமுக நூறாண்டுகளுக்குப் பிறகும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில கருத்துக்களை சொல்லி இருந்தோம். கட்சியில் வெற்றி, தோல்வி சகஜம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற கருத்தை வைத்திருந்தோம். எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து ஒன்றன் பின் ஒன்றாக செய்வதாக எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். எங்களுக்கு இடையே பிளவு இல்லை; கருத்து வேறுபாடு தான்.
பதவிக்காக சென்றதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் பதவிக்காக செல்லவில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். ஆளும் தரப்பும் சொல்லிவிட்டார்கள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்தின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த வேலுமணி, “நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” என்றார். அதைத் தொடர்ந்து பேட்டி அளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே பேரவைத் தலைவர் என்ற முறையில் என்னிடம் சில மனுக்களை அளித்திருந்தார்கள். அந்த மனுக்கள் என்னிடம் ஆய்வில் உள்ளன.
இதற்கிடையே இரு வேறு குழுக்களாக இருந்த அதிமுக உறுப்பினர்கள் தனித்தனியாக என்னை சந்தித்து மனுக்களை அளித்துள்ளார்கள். அந்த மனுக்கள் ஆய்வில் இருக்கின்றன. நாளை காலை எனது முடிவை அறிவிக்கிறேன்” என்றார்.


