வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்
சமூக ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைகள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,200-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில் அத்தொகையை அரசே ஏற்கும்.
வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.
அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசு சார்பில் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆன்லைன் முறை ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறையே (Manual) மீண்டும் பின்பற்றப்படும்.
இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்ட முதற்கட்ட வாக்குறுதிகள்
குல விளக்குத் திட்டத்தின் மூலம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 2,000/- வரவு வைக்கப்படும்.
நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம் செய்யலாம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடுகளும், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகளும் என்று அரசு சார்பில் இடம் வாங்கி கட்டிக் கொடுக்கப்படும்.
அதே போல, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும்போது, அவர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அது 150 நாட்களாக உயர்த்தப்படும்.
ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்’ என கடந்த ஜனவரி 16-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.


