தென்காசியில் அலுவலகத்திற்குள் புகுந்து அரசு வழக்கறிஞர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தற்போது சிகிச்சை பலன் இன்றி வழக்கறிஞர் மணரமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசுவாமி (42). தென்காசி செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும், கூலக்கடை பஜாரில் வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி நடத்தி வந்துள்ளார்.
இதனிடையே இன்று (டிசம்பர் 3) இவரின் அலுவலகத்தில் திடீரென புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது முத்துக்குமாரசுவாமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், ஓடி வந்த நிலையில், அவர்களை பார்த்த மர்மநபர்கள் உடனடியாக விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி போலீசார், காயமடைந்த முத்துக்குமாரசுவாமியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் முத்துக்குமாரசுவாமி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்த் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். கொலைக்கான காரணம் மற்றும் அவரை கொலை செய்த மர்ம நபரின் அடையாளம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி கொலை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள், தென்காசி புதிய பேருந்து நிலையம் மற்றும் நடுபஜார் பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


