தமிழகத்தை உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த நவம்பர் 2ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை 24 மணி நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன் மற்றும் இவர்களின் உறவினரான தவசி என்ற குணா என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் கடந்த 27ஆம் தேதி குற்றவாளிகளை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இந்த குற்றவாளிகள் மூன்று பேரும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அன்று காலை அன்னூர் அருகே செரையம்பாளையம் பகுதியில் 3 பேரும் மது அருந்தி கொண்டிருந்த போது கண்டித்த ஆட்டு வியாபாரியை அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது.முன்னதாக கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேருக்கும் எதிராக கோவை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன்னிலையில் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உள்ள தொடர்பு குறித்து முதல் கட்டமாக 50 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை கடத்தல் நகை பறிப்பு ஒன்றாக இணைந்து குற்ற சம்பவங்களை ஈடுபடுதல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் குற்றவாளிகள் மூவரின் புகைப்படங்களை இன்று காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும் ஆட்டு வியாபாரியை கொலை செய்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறையினர் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.


