அவினாசி சாலையில் திறக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு அதிமுக ஆட்சியில் முழு நிதியையும் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை அவினாசி சாலையில் ரூ.1,791 கோடி மதிப்பில் கோல்ட் வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை புதியதாக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரிட்ட தமிழக அரசு அதனை நேற்று திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தது. இந்நிலையில், இந்த மேம்பால பணிகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது என்பதால் இன்று உப்பிலிபாளையம் பகுதியில் அதிமுகவினர் மேளதாளம் முழங்க, வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர்.ஜெயராமன் ஜமாப் இசைக்கு ஏற்ப நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் 10 கி.மீ ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.உப்பிலிபாளையம் முதல் கோல்ட் வின்ஸ் வரை கட்சியினருடன் வாகனத்தில் பயணித்த எஸ்.பி.வேலு மணி, கோல்ட்வின்ஸ் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். பாலத்தை பார்வையிட்ட பின்பு கோல்ட் வின்ஸ் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ”50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி, அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அவினாசி சாலையில் மேம்பாலம் வேண்டுமென்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்த நிலையில், அவர் முழு நிதியையும் கோவை மக்களுக்காக ஒதுக்கி தந்தார்இந்த பாலத்தின் பணிகள் அதிமுக ஆட்சியில் 55 சதவீதம் நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு மற்றும் ஆட்சி மாற்றம் போன்றவற்றால் ஒன்றரை ஆண்டுகள் பணிகள் நின்றது. தற்போது இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சிதான். கோவைக்கு நான்கரை ஆண்டுகளாக இந்த ஆட்சியில் எதுவும் அறிவிக்கவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை தான் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த பாலத்தில் வேகத்தை கட்டுப்படுத்த கேமரா பொருத்த வேண்டும். முறையாக டைவர்சன் செய்து விபத்தில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றார்.



