தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலம் கிடைக்கும் பலன்கள் சென்று சேரும் வகையில் இன்று அத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த விரிவாக்கத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்ததை அடுத்து, கோவையிலும் இது துவக்கி வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 46 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 6026 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில்இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி, சிங்காநல்லூர், காமராஜர் சாலை, காந்தி நூற்றாண்டு நடுநிலைப் பள்ளியில் விரிவாக்கம் நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பராஜ்குமார், மேயர் ரங்கநாயகி , மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில்,கோவை கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ மாணவியர்களுடன் காலை உணவினை உட்கொண்டார்.


