சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (11.10.2023) கோமங்கலம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் செல்லப்பா பாளையம் சாலை சந்திப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது நான்கு சக்கர வாகனத்தில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன் மகன் சந்தனகுமார் (23) மற்றும் உத்திரபிரதேஷ் மாநிலத்தைச் பகவான் ஸ்வரூப் மகன் பிரஜேந்திர சிங் (26) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா, ரூபாய் 1,30,000/-, நான்கு சக்கர வாகனம்-1 மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 497 நபர்கள் மீது 374 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 671.336 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.


