கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய பகுதியான சங்கம்பாளையம் காலனியில் வசித்து வரும் நாகராஜ் (70) என்பவர் சொந்த வேலை காரணமாக தற்போது பொள்ளாச்சி பணிக்கம்பட்டியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாகவும், கடந்த 29.08.2023 அன்று அவரது வீட்டை சுத்தம் செய்ய வேண்டி வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் உள்ள 12½ சவரன் தங்க நகையை திருடிச் சென்றது தெரிந்து, இது சம்மந்தமாக மேற்படி நபர் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், அவர்கள் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில், இன்று (07.10.2023) காலை சுமார் 09.30 மணியளவில் மண்ணூர் அருகே வாகன சோதனை செய்து வந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது மகன் சாலு(37) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. மேலும் இதேபோல் இவர் மகாலிங்கபுரம் காவல் நிலைய பகுதியிலும் வீடு புகுந்து 7 சவரன் தங்க நகையை திருடியுள்ளதும் தெரிய வந்தது. எனவே மேற்படி நபரிடம் இருந்து வீடு புகுந்து திருடிய வழக்குகளில் தொடர்புடைய 19½ சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி சாலு (37) என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.


