வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு 20 நிபந்தனைகளை போலீசார் nu விதித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேசமயம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, வேலூர் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய இடவசதி, குடிநீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் இதற்கான மைதானம் அமைக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க க்யூ-ஆர் கோட் (QR Code) அடிப்படையிலான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள இந்த நிகழ்ச்சிக்காக, அகரம்சேரியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான திடல் தயார் செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து சுமார் 25,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கோரி அக்கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் மனு அளித்திருந்தார். இதனைப் பரிசீலித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், நிகழ்ச்சி நடத்துவதற்கு 20 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கிய பின்னரே அதிகாரப்பூர்வ அனுமதி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் வேலூர் வருகிறார். உற்சாக மிகுதியில் அவரது வாகனத்தை யாரும் பின்தொடர்ந்து செல்லக் கூடாது. கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆக அறிவுறுத்தப்பட்டுள்ளது.விஜய் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களே இருப்பதால் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ஏற்கனவே சேலம், ஈரோடு போன்ற இடங்களில் தனது உரையின் மூலம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்த விஜய், வேலூர் அகரம்சேரி கூட்டத்தில் எப்படியான பேச்சைப் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


