எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறார். இரு தலைவர்களும் பேசிக்கொண்டது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விவரித்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, “இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர். நட்பு ரீதியான இந்திய-சீனா உறவு, இரு நாடுகளின் 208 கோடி மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் இரு தலைவர்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுடன் உறவை மேம்படுத்த நான்கு முன்மொழிவுகளை சீன அதிபர் முன்வைத்தார். பதிலுக்கு உறவுகளின் சீரான முன்னேற்றத்திற்கு எல்லையில் அமைதி எவ்வளவு முக்கியம் என்பதை மோடி வலியுறுத்தினார். ஆனால் இரு தலைவர்களும், வேறுபாடுகள் சச்சரவுகளாக மாற அனுமதிக்கப்படக்கூடாது என ஒப்புக்கொண்டனர். வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேசிய தலைவர்கள், உலகளாவிய வர்த்தகத்தை மேம்படுத்த இருநாட்டின் பொருளாதாரம் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினர். வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கப் பணியாற்றும் அதேவேளையில், அரசியல் கண்ணோட்டத்தில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலா விசாக்கள் மீண்டும் தொடங்கப்பட்டதன் அடிப்படையில், நேரடி விமானங்கள் சேவையை கொண்டுவருவது, விசா செயல்முறைகளை எளிதாக்குவது குறித்தும் பேசியிருக்கிறார்கள். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தன்னாட்சிப் பாதையைப் பின்பற்றுகின்றன என்று பிரதமர் கூறியிருந்தார். மேலும், இந்தியா மற்றும் சீனா உறவுகள் ஒரு மூன்றாவது நாட்டின் பார்வையில் பார்க்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதம் போன்ற சவால்கள் மற்றும் பலதரப்பு மன்றங்களில் நியாயமான வர்த்தகத்தின் தேவை உட்பட, இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களில் பொதுவான தளத்தை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். 2026 இல் இந்தியா நடத்தும் BRICS உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதேபோல பதிலுக்கு இந்தியாவின் BRICS தலைமைக்கு தனது ஆதரவை தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.


