தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என வைகோ தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தே.ஜ கூட்டணியில் இணையும் என எதிர்பார்த்த தேமுதிக, இன்று (பிப்.19) திடீரென திமுக கூட்டணியில் இணைந்தது.
இந்த நிலையில், மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் மதுரை அழகர்கோவில் சாலையில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, “தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கக்கூடும். இது ஒரு நாள் தேர்தலாகத் தான் இருக்கும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும் என சிலர் ஏடுகளில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மதிமுக இந்த முறையும் தனி சின்னத்தில் தான் போட்டியிடும். சட்டமன்ற தேர்தலில் மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என கோவை மற்றும் ஈரோட்டில் கேட்ட போது, அது பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு திமுகவிடம் சென்று பேசிய பின்பு தான் முடிவெடுக்க நேரிடும் என சொன்னேன். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். அதுவே தேர்தல் முடிவாக அமையும் என்பது எனது கருத்து. கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. திமுக தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்பட்சத்தில், கூட்டணிக் கட்சிகள் அந்த அரசுக்கு பக்கபலமாக அரசியல் செய்யும். இதே நிலைமை தான் தமிழ்நாட்டில் தொடரும் என்பதும் என்னுடைய கணிப்பு.
தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே வலுவாக இருந்த திமுக, இதன்மூலம் இன்னும் வலிமை பெரும். திமுக கூட்டணியே தேர்தலில் வெற்றி என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது எனக் கூறி வந்தேன். இப்போது எங்கள் கூட்டணி மேலும் பலம் பெற்றுள்ளது. இது எனக்கு தித்திக்கும் வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்த்தரப்பிலே (அதிமுக கூட்டணி) கலகலத்துப் போயுள்ளது” என தெரிவித்தார்.மேலும் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “மாணிக்கம் தாகூர் எம்.பி “நான் திருப்பி அடிப்பேன்” என்ற கருத்தை எல்லாம் தெரிவித்து வருகிறார். செல்வப் பெருந்தகையும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்கிறார். காங்கிரஸ் கட்சியில் நிலவுவது உட்கட்சி விவகாரம். இதை திமுக பொருட்படுத்தாது. மேலும், அழகிரி ஆதரவாளர்கள் அதிமுகவிற்கு செல்வது ஒரு சதவீதம் கூட திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது” என்றார். மேலும், விஜய் அதிக வாக்குகள் வாங்குவார் எனக் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளே கருத்து தெரிவித்து வருகின்றனர் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஒரே நேரத்தில் 9 குரல் கொடுப்பார்கள். அதைப் பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை” என தெரிவித்தார்.


