தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பால், 4 நாள் மட்டுமே வேட்புனுத் தாக்கல் செய்ய முடியும் என தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்ரல் 6 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
8 நாட்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்று வேட்பாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் திடீரென்று இன்று (மார்ச் 25) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மொத்தமுள்ள 8 நாட்களில் 4 நாட்கள் விடுமுறை வருவதால் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல், மார்ச் 30ஆம் தேதி தொடங்கி, கடைசி நாளான ஏப்ரல் 06ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம்.
மேலும், மார்ச் 31 (செவ்வாய்), ஏப்ரல் 01 (புதன்), ஏப்ரல் 03 (வெள்ளி), ஏப்ரல் 05 (ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் அரசின் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 4 விடுமுறை நாட்களிலும் வேட்புமனுக்கள் பெறப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளார்.
இதனால், மார்ச் 30, ஏப்ரல் 02, ஏப்ரல் 04, ஏப்ரல் 06 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, அவசர அவசியம் கருதி, தேர்தல் ஆணையம் 4 நாள்கள் விடுமுறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


