தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் மூன்று பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று வெளியிட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 30- ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (மார்ச் 25) அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, அமமுக, தமாகா, பாமக, புரட்சிப் பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சித் தலைவர்களின் முன்னிலையில் அறிவித்திருந்தார்.இதில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு சேலம் மேற்கு உள்ளிட்ட 18 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பாமக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மூன்று பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று வெளியிட்டார்.அதன்படி, கீழ்வேளூர் சட்டப் பேரவை தொகுதியில் பாமகவின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், அம்பத்தூர் சட்டப் பேரவை தொகுதியில் நகர்மன்ற முன்னாள் தலைவரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான சி.ஹெச். சேகர், செஞ்சி சட்டப் பேரவை தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கணேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


