தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
மொத்தம் 127 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் பிரபு, திருப்பூர் வடக்கு தொகுதியில் எம்எஸ்எம் ஆனந்தன் உள்ளிட்டோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 23 பேர் அறிவிக்கப்பட்டிருந்த தற்போது இரண்டாம் கட்ட பட்டியலில் 123 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அதன்படி, கும்மிடிபூண்டி தொகுதியில் சுதாகர், பொன்னேரி (தனி) தொகுதியில் சிறுணியம் பலராமன், திருத்தணி தொகுதியில் கோ.அரி, திருவள்ளூர் தொகுதியில் ரமணா, மாதவரம் தொகுதியில் மாதவரம் மூர்த்தி, திருவொற்றியூர் தொகுதியில் குப்பன், ஸ்ரீபெரும்புத்தூர் (தனி) தொகுதியில் பழனி, தாம்பரம் தொகுதியில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், செங்கல்பட்டு தொகுதியில் கஜேந்திரன், செய்யூர் (தனி) தொகுதியில் ராஜசேகர், மதுராந்தகம் (தனி) மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் தொகுதியில் சோமசுந்தரம், அரக்கோணம் (தனி) தொகுதியில் ரவி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் தொகுதியான காட்பாடியில் அதிமுக சார்பில் ராமு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கீழ்பென்னாத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு தொகுதியில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன், அதிமுகவின் கோட்டையான சேலம் தெற்கு தொகுதியில் வினோத், ஓமலூர் தொகுதியில் எம்எல்ஏ மணி ஆகியோர் களம் காண்கின்றனர். இவர்களை போன்று, உளுந்தூர்பேட்டை தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு, கெங்கவல்லி (தனி) தொகுதியில் எம்எல்ஏ நல்லதம்பி, ஆத்தூர் (தனி) தொகுதியில் எம்எல்ஏ ஜெய்சங்கரன், மேட்டூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம், பரமத்திவேலூர் தொகுதியில் எம்எல்ஏ சேகர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், உடுமலைபேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் உடுமலைப்பேட்டை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், புவனகிரி தொகுதியில் எம்எல்ஏ அருண்மொழிதேவன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சூலூர் தொகுதியில் எம்எல்ஏ கந்தசாமி, கவுண்டம்பாளையம் தொகுதியில் எம்எல்ஏ அருண்குமார், அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா, ஆலங்குளம் தொகுதியில் முன்னாள் எம்பி கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 150 வேட்பாளர்களில் 46 பேர் தற்போது அதிமுக எம்எல்ஏக்களாக உள்ளனர். 17 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். அதேபோல் 31 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.


