தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான அஜித் பவார், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் இன்று காலை தனது சொந்த தொகுதியான பாராமதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தனி விமானத்தில் பயணித்துள்ளார். 8 இருக்கைகள் கொண்ட லியார்ஜி என்ற சிறிய ரக விமானத்தில் அஜித் பவாருடன் விமானிகளான சுமித் கபூரும், சாம்பவி பதக்கும் இருந்துள்ளனர். இவர்களுடன் 2 உதவியாளர்கள் மற்றும் ஒரு நிர்வாகி பயணித்துள்ளனர்.காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையம் அருகே சென்றபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டதால், விமானிகள் உடனடியாக தரையிறக்க முயன்றுள்ளனர். ஆனால் விமான நிலையத்தின் ஓடுபாதை நுழைவு பகுதியிலேயே விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 6 பேரையும் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து அஜித் பவார் உட்பட 6 பேரின் உடல் பாராமதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் 6 முறை துணை முதலமைச்சராக பணியாற்றி, அதிக முறை துணை முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் அஜித் பவார். இவர் பலமுறை பாராமதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் மூத்த அரசியல்வாதியான சரத் பவாரின் மருமகன் ஆவார்.
அதிர்ச்சியாக உள்ளது – பிரதமர் மோடி
இதனிடையே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “அஜித்பவார் ஒரு மக்கள் தலைவர். மக்களிடம் நேரடி தொடர்பு வைத்திருந்தவர். மகாராஷ்டிரா மக்கள் நலனுக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர் என்ற பெயரை அவர் பெற்றிருந்தார். நிர்வாகத்தில் அவருக்கு இருந்த புரிதலும், ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அவருக்கு இருந்த வேட்கையும் குறிப்பிடத்தக்கவை.
அவரது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் தந்துள்ளது. இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் உயிழந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் மன உறுதி அவர்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கருப்பு பெட்டி மீட்பு
இதனிடையே, விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை போலீசார் மீட்டுள்ளனர். இந்த கருப்புப் பெட்டியில்தான் விமானத்தில் பயணம் செய்தவர்களின் பேச்சு பதிவாகியிருக்கும். இதனை ஆய்வு செய்தால், விபத்து நிகழ்வதற்கு முன்பு விமானிகள் என்ன பேசினார்கள், விபத்துக்கான காரணம் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


