: “எங்கள் காவிரி. எங்கள் உரிமை” என்பதை வலியுறுத்தி கோவையில் நாம் தமிழர் கட்சியினர் கர்நாடக அரசை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கான காவிரி நீரை தருவதற்கு கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், தமிழக விவசாயிகள் உட்பட பல்வேறு கட்சியினர் தமிழக அரசு காவிரி நீரை பெற்று தர கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென தெரிவித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கர்நாடக அரசு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு பகுதியாக கோவை டாடாபாத் பகுதியில் கோவை மண்டல செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் “எங்கள் காவிரி எங்கள் உரிமை, காவிரியில் வேண்டும் தண்ணீர் மக்களுக்கு அதுவே குடிநீர், தண்ணீரை கொடு அல்லது தனியாக விடு, காவிரி உனக்கு அரசியல் எங்களுக்கு வாழ்வியல்” உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் தண்ணீர் கேட்பது பிச்சை இல்லை எங்கள் உரிமை என்றும், காவிரி நமது குருதி ஓட்டம் என்றும், கன்னடனே ஒழிய வேண்டும் என்றும், நீரை தர மறுத்தால் மின்சாரத்தை தர மறுப்போம் என்றும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.



