முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அவையில் இருந்து வெளிநடுப்பு செய்வதாக அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான மொத்தம் 4 கோடி 93 லட்சம் வாக்குகளில், ஒரு கோடி 72 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகள் தவெக பெற்றது. தவெகவிற்கு எதிராக சுமார் 3 கோடி பேர் வாக்களித்துள்ளனர். உங்களுக்கு வாக்களித்தவர்களுக்கே உங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது.
தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை முதலமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ஒரு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வாக்களிக்கவில்லை. அதன்படி, 106 இடங்கள் தான் உள்ளது. திமுக கூட்டணி ஆதரவு கட்சிகள் உடன் ஆட்சி அமைத்துள்ளீர்கள். குடியரசு தலைவர் ஆட்சி அமைந்துவிடும் என கூறியதால் எங்கள் கூட்டணி கட்சிகள் ஆதரவளித்தன. அப்போதும் திமுக உடன் கூட்டணியைத் தொடர்வதாக விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூறியுள்ளனர்தேசிய ஜனநாயக கட்சி ஆதரவில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளர், அவருடைய கட்சி தலைவருக்கே தெரியாமல் உங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்.சட்டப்பேரவை உறுப்பினர்களை கடன் பெற்று ஆட்சியை முதலமைச்சர் தக்கவைத்துள்ளார். இந்த வாக்கெடுப்பில் திமுக கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்கிறது. நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், காலை உணவு, தாயுமானவர், அன்புக் கரங்கள் போன்ற திமுக-வின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர வேண்டும்” என்று குறிப்பிட்டு பேசினார்இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம். தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது.
மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை. மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், ‘sofa’ அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.” என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


