தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில் முன்மொழிந்தார். அதனைத்தொடர்ந்து தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிநடப்பு செய்வதாக அறிவித்த நிலையில், திமுக மற்றும் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார். பெரும்பான்மையை பெற 117 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தவெக அரசிற்கு 144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவை அளித்தனர். இதன் மூலம் தவெக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்தது. மேலும், அதிமுக சார்பில் 22 எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பும், பாமக, பாஜக சார்பில் 5 பேர் நடுநிலையும் வகித்தனர். மொத்தம் 171 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர், 60 பேர் பங்கேற்கவில்லை. திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை விதிப்பு காரணமாக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்றதாக அறிவிப்பு
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை பெற்று, வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்து, வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தவெக 144 வாக்குகளை பெற்றது எப்படி?
தவெக எம்.எல்.ஏ-க்கள் 105, காங்கிரஸ் 5, சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தலா 2, காமராஜ் (அமமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்) 1 மற்றும் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் 25 என மொத்தம் 144 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் 2 தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற காரணத்தினால், எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 107 ஆக குறைந்தது.
திமுக கூட்டணி 73 இடங்களில், அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் தொங்கு சட்டப்பேரவை என்ற நிலை உருவானது. இதனையடுத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களை பெற, பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. தவெகவின் கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவளித்தது. தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் இராசேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆதரவு கடித்ததை வழங்கி ஆட்சியமைக்க அழைக்கக் கோரினார். அதனையடுத்து, முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், மே 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. மே 10-ம் தேதி சென்னை நேரு அரங்கத்தில் தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மே 11-ம் தேதி கூடியது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட தற்காலிக சபாநாயகர் கருப்பையா, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மறுநாள் சபாநாயகராக தவெக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த கே.சி.டி.பிரபாகர் மற்றும் துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, இன்று சட்டப்பேரவையில் தவெக அரசிற்கான பெரும்பான்மைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


