அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிப் பெறும். அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக எடப்பாடியை மீண்டும் மாற்றிடும் வகையில் பணிகளை மேற்கொள்வோம் என்றார்.மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புறக்கணித்து வருகிறது என்று குற்றம்சாட்டிய ஈபிஎஸ், அதிமுக ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று சூளுரைத்தார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார். ஆ ராசா ஆடியோ இணையதளங்களில் வெளியானது. அதைத்தான் நான் கிருஷ்ணகிரி கூட்டத்தில் பேசினேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் திமுக தலைமை என் மீது பாய்வதால் என்ன பலன்? என்றும் கேள்வி எழுப்பினார். திமுக ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம் என்று கூறிய பழனிசாமி, திமுக அமைச்சர்கள் ஊழல் குறித்து அமலாக்கத் துறையே சட்டம் – ஒழுங்கு டிஜிபி வசம் மூன்று முறை அறிக்கை அளித்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அதனால் தான் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில் காலதாமதம் ஆகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதிமுக தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி; மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற கட்சி; மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்பும் கட்சி. அதனால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக எடப்பாடி பகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையை அவர் திறந்து வைத்தார்.


