உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் சதய விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

தஞ்சாவூரை ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழனின் 1040வது ஆண்டு சதய விழா இன்று (அக்.31) மற்றும் நாளை (நவ 1) ஆகிய இரண்டு நாட்களில் தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது. இவ்விழாவில் தொடக்க நாளான இன்று கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலம் சார்பில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சியோடு பேரணியாக வலம் வந்து பெரிய கோயில் நந்தி மண்டபத்தில் நிறைவடைகிறது.
இப்பேரணியில் கொம்பு வாத்தியம், சிலம்பாட்டம், புலியாட்டம், கும்மிக் கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நையாண்டி மேள நாதசுரம், தவில், கரகாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம் ஆகியவை நடைபெற்றது. மேலும் தேவலோக நடனங்களான சிவன், பார்வதி, காளி, பச்சைக்காளி, பவளக்காளி, அரக்கன், கருப்பு ஆகியவையும், வள்ளித் திருமண வேடத்திலும் வலம் வருதல் நிகழ்வும், பம்பை கைச்சிலம்பாட்டம், மற்றும் பெரியமேளம் போன்ற கலைகளில் 250க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு கலை ஊர்வல பேரணியாக நடைபெற்றது. மேலும், இந்த ஊர்வல நிகழ்ச்சியில் அக்கால இராஜராஜ சோழனின் நகர்வலத்தை இக்கால தலைமுறைக்கு நினைவுப்படுத்தும் வகையில், குதிரை பூட்டப்பட்ட தங்கரதம், இராஜஇராஜ சோழன் வேடம், அமைச்சர்கள் வேடம், வாயில்காவலர்கள் வேடம் ஆகியவற்றில் வேடமிட்ட கலைஞர்கள் பங்குபெறும் ஊர்வல நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை எம்பி முரசொலி, எம்எல்ஏ சந்திரசேகரன், மேயர் இராமநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் இராஜாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 1040வது சதய விழா 2 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தேவார திருமுறை அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.



