தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.
அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் (அக்.27) காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக உருவெடுக்கும். அதன்பிறகு அடுத்த 48 மணி நேரங்களில் வடமேற்காக ஆந்திர பிரதேச கடற்கரையை நோக்கி நகரலாம்.
எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், சென்னை ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


