கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி கோரி தவெக தலைவர் விஜய் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்வதாக அறிவித்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அன்றிரவே முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் , திமுக அமைச்சர்களும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, பிற கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தனர். இருப்பினும், சம்பவத்தன்று இரவே சென்னைக்கு திரும்பிய தவெக தலைவர் விஜய், அடுத்த சில நாட்களில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.இருப்பினும், ஓரிரு நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் விஜய். அவர் நேரில் செல்லாதது குறித்தும், அந்த வீடியோவில் பேசிய கருத்துக்களும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், விஜய்யின் செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு நேற்று ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் நேரில் சந்திக்க வருவதாகவும் அவர்களுக்கு உறுதியளித்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அறிவழகன், தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க அனுமதி அளிக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் எந்த தேதியில் அனுமதி கொடுத்தாலும் அன்று தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் அறிவழகன், “கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.
மனுவிற்கு டிஜிபி அலுவலகத்தில் என்ன பதில் கொடுக்கப்பட்டது? விஜய் எப்போது செல்கிறார்? போன்ற பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விஜய்யின் வழக்கறிஞர் அறிவழகன் பதிலளிக்க மறுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


