சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பின்னர் தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார்.
திருச்சி வந்தடைந்த விஜய்க்கு, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து, திருச்சி மாநகராட்சியின் பாலக்கரை பகுதியில் மண்டல அலுவலகத்திற்கு சென்ற விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர், பிரச்சார வாகனத்தில் நின்றவாறு சென்ற விஜய்க்கு, சாலையின் இரு புறங்களிலும் நின்று தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, விஜய் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
கட்சித் தொடங்கி முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகம் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.கடந்த மார்ச் 30-ம் தேதி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் விஜய் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அன்றைய தினமே கொளத்தூர், பெரம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் பாதுகாப்பு குறைபாடு காரணம் என்று கூறி வில்லிவாக்கத்தில் தனது பிரச்சாரத்தை அவர் ரத்து செய்திருந்தார்.
திருச்சி கிழக்கில் திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். சிறுபான்மையினர் வாக்கு அதிகம் உள்ள தொகுதி என்பதால் திருச்சி கிழக்கில் திமுக – தவெக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


