கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், முன் ஜாமின் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தன. நீதிபதி ஜோதிராமன் முன்பு நடைபெற்ற விசாரணையில் மனுதாரர் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மாறி மாறி காரசார விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.
தவெக தரப்பு வாதம்
அப்போது, தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், “காவல் துறையின் செயல்பாடு ஏற்கக்கூடியதல்ல. பிரச்சாரம் நிகழ்ந்த இடத்தில் ரவுடிகள் உள்ளே புகுந்தனர். நாங்கள் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினோம். இருப்பினும் காவல் துறை ஏன் தொண்டர்கள் மீது தடியடி நடத்தியது? இது குறித்து FIR -யில் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து அவர், “ஒரு நாளைக்கு முன்பாகவே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அன்று முறையிட இயலவில்லை. அதனால் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்தை நடத்தும் நிலை வந்தது. அந்த இடத்தில் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் போதே காலி ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்கு நடுவே கொண்டு வரப்பட்டன. இதனால் விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்துகளை விபத்துகளாக பார்க்காமல், பொதுச் செயலாளர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்” என கேள்வி எழுப்பினார். மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமை என்றும், திமுக நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கும் போது இது போன்று நடந்தால் முதல்வர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வீர்களா? எங்கள் கட்சிக்கு ஒரு நியாயம், திமுகவிற்கு ஒரு நியாயமா? எனவும் தவெக சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், அப்படியே வழக்குப்பதிவு செய்தாலும் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தான் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டுமே தவிர, மாநில நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? எனவும் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு போலீசார் தரப்பில், வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. தவெகவினர் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லை எனவும், தங்கள் கட்சித் தலைவர் 12 மணிக்கு வருவார் என இவர்கள் அறிவித்ததே, 41 பேரின் மரணத்தில் இவர்களுக்கு இருக்கும் தொடர்பு என குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு நீதிபதி ஜோதிராமன், “மதியம் 3 – 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், 41 பேரின் உயிரிழப்புக்கு இதுவரை பொறுப்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. காவல் துறை இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது?” என கேள்வி எழுப்பினார். அதற்கு, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாத போதிலும், நடத்தியதாக அரசு தரப்பில் கூறப்பட்டதற்கு, நிகழ்ச்சியை ஏன் ரத்து செய்யவில்லை என நீதிபதி பதில் கேள்வி எழுப்பினார். பிரச்சினை எழக் கூடாது என்று தான் அவ்வாறு செய்யவில்லை என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, “தங்களது கட்சித் தலைவர் பேசும் போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருக்க வேண்டும் என எண்ணி கூட்டத்தை அதிகளவில் அக்கட்சியினர் கூட்டி உள்ளனர். விஜய் வருவதற்காக அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் 8 மணி நேரமாக அந்த பகுதியில் காத்திருந்தனர். எனவே இந்த உயிரிழப்புகளுக்கு தவெக தான் காரணம். ஆனால் சம்பவம் நடைபெற்றவுடன் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். உயிரிழப்புகள் நிகழ்ந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அந்த பகுதியில் வந்து பார்க்கவில்லை” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடியிருந்த தொண்டர்களுக்கு குடிநீர் கூட வழங்கவில்லை எனவும், அதனால் சோர்வு ஏற்பட்டதாகவும் கூறியதோடு, இதுகுறித்து ஆணையம் விசாரணை நடத்தி வருவதால் முன் ஜாமின் வழங்கக் கூடாது எனவும் காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. அதற்கு மனுதாரர்கள் தரப்பில், கூட்டத்தில் ஸ்ப்ரே அடிக்கப்பட்டதும், தடியடி நடத்தியதுமே நெரிசலுக்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், இன்று மாலை முன் ஜாமின் குறித்து அறிவிப்பதாக கூறி நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வாதத்தை ஏற்று புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவரின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து இருவரும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.


