முல்லை பெரியாற்றில் வெள்ளம் ஏற்பட்டு தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் விளை நிலங்கள் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி மணற்படுகை பகுதியில் முல்லைப் பெரியாறு பாய்கிறது. இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரை உடைந்து தண்ணீர் முழுவதும் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் விவசாய விளைநிலங்களில் இருந்த நெற்கதிர்கள், பயிர்கள், 40 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் போன்றவை சேதம் அடைந்தன. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தலைவர் மனோகரன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து முல்லைப் பெரியாறு தடுப்பணைகளை சரி செய்துத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மனோகரன் கூறுகையில், ”முல்லைப் பெரியாறில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கம்பம் – சுருளிப்பட்டிப் பகுதியில் உள்ள மணற்படுகை கரை உடைந்தது. இதனால் விளைநிலங்களுக்குள் ஆற்று நீர் புகுந்ததால் 40 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தது.
விவசாய நிலத்தில் உரிமையாளர்கள் தங்கள் சொந்த செலவில் 8 லட்சம் மதிப்பில் சேதம் அடைந்த கரைப்பகுதிகளில் மணல் மூட்டைகள் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்திய நிலையில் நீர் வரத்து அதிகரித்ததால் மணல் மூட்டைகளுக்கு மேல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
இந்த ஆற்றில் செல்லும் நீர் மூலம் 8000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலையில் கரை உடைந்து சேதம் ஏற்பட்டதால் நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.


