தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 2020 ஜூன் மாதம் 19ஆம் தேதி, சாத்தான்குளம் பகுதியில் இரவு நேரத்தில் மொபைல் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் (58) மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) உள்ளிட்டோரை விசாரணைக்காக சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் அவர்களை கொடூரமாக தாக்கிய போலீசார், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதல் காரணமாக ஜூன் 22 ஆம் தேதி மாலை பென்னிக்ஸிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து 23ஆம் தேதி அதிகாலை ஜெயராஜும் மருத்துமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், காவல் துறையில் நிலவும் காவல் மரணங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எற்றது. இந்த கொடூர கொலை சம்பவத்தின் போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர், காவல் நிலையத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் இது மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.மேலும், இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஐ பால்துரை, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன் உள்ளிட்ட 10 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில், எஸ்.எஸ்.ஐ பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்ததால், தற்போது வழக்கில் எஞ்சிய 9 காவலர்கள் மீதான வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வில் நடைபெற்று வந்தது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன்னிலையில், சுமார் ஆறு ஆண்டுகளாக இந்த விசாரணை நடைபெற்றது. சிபிஐ தரப்பில் 50-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, பல்வேறு ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தந்தை-மகன் இருவரும் காவல் துறையினரால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதே அவர்களின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 -ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.


