நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். 4 தேசிய விருதுகள், 20 ஃபிலிம்பேர் விருதுகள், 11 மாநில அரசின் விருதுகள், 4 நந்தி விருதுகள், கலைமாமணி, பத்மபூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ’நீயே விடை’ என்ற நிறுவனம், தனது புகைப்படம், பெயர், தனது வசனங்களை உரிய அனுமதியின்றி பயன்படுத்தி டி–ஷர்ட்களை விற்பனை செய்து வருவதற்கு தடை விதிக்கக்கோரி கமல் ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வர்த்தக ரீதியில் கமல் ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து கடந்த ஜனவரி 12-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் சென்று சேரவில்லை. அதனால், மின்னஞ்சல் மூலமாக வழங்க கால அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும்’ என கமல் ஹாசன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, இந்த விவகாரம் அனைவருக்கும் தெரியும்படி பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியும், பின்னர் ஏன் விளம்பரம் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து வழக்கு விசாரணையை பிப் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


