தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், முதல் முறையாக தேர்தல் களம் காணும் தவெக தலைவர் விஜய்யும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று பிற்பகல் பிரசாரம் செய்தார். இதற்காக விஜய் இன்று காலை 10.20 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 11 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தார். பின்னர் அவர் அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். பகல் 12.30 மணியளவில் விஜய் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.அங்கு அவரை பார்ப்பதற்காக ஏராளமான தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து விஜய் கையசைத்தார். அதன்பிறகு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வேனில் ஏறி விஜய் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விஜய் வேனில் சென்ற போது வழி நெடுக ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டு நின்று உற்சாக கோஷம் எழுப்பி அவரை பார்த்து கையசைத்தனர். பதிலுக்கு விஜய்யும் வேனுக்குள் இருந்தபடியே அவர்களை பார்த்து கையசைத்தார்.

சைக்கிளில் ரவுண்டு அடித்த விஜய் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாதானபுரம் ரவுண்டானா பகுதிக்கு வந்த விஜய், திடீரென சைக்கிளில் இறங்கி ரவுண்டானாவை சுற்றி சுற்றி வந்தார். விசில் அடித்துக்கொண்டே சைக்கிளில் சுற்றி விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது விஜய்யை பார்ப்பதற்காக தடுப்புகளை உடைத்துக்கொண்டு தவெக தொண்டர்கள் வந்ததால் பரபரப்பு உண்டானது.இதனால் விஜய்யை பார்க்க முண்டியடித்துக் கொண்டு அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் விஜய்யின் பவுன்சர்கள் கடும் பாடுபட்டனர். ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் வரை விஜய் ரோடுஷோவாக புறப்பட்டுள்ளார். விஜய்யின் வருகையால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
வாக்குறுதி அளித்த விஜய்
தொடர்ந்து குமரியில் பேசிய விஜய், “இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை நம் ஆட்சி அமைந்தால் பொதுமக்களும் முன் வைக்க முடியும் என்றும் கூறினார். மேலும் 10 ஆயிரம் அதிகாரப்பூர்வ கையெழுத்துடன் மனு அளிக்கப்பட்டால் அரசு பதில் அளிப்பது கட்டாயம் ஆக்கப்படும் எனவும், 5 லட்சம் பேர் கொடுத்தால் சட்டசபையில் ஒரு நாள் நேரம் ஒதுக்கி அது பற்றி விவாதிக்கப்படும் என்றும் விஜய் கூறினார்.


