தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையவுள்ளதை அடுத்து, தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸை அடுத்து, ஏப்ரல் 9-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 4,023 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி இன்று (ஏப்ரல் 12) முதல் தொடங்கியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 28,93,505 வாக்காளர்களுக்கு இன்று முதல் ஏப்.18 ஆம் தேதி வரை வாக்காளர் தகவல் சீட்டு, அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாக விநியோகம் செய்யப்படவுள்ளது.
வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பூத் சிலிப்பிற்கு ஒப்புதலான அவர்களின் கையெழுத்து அல்லது கைரேகை பெறப்பட்டு வருகிறது. வாக்காளர்களின் வசதியை அதிகரிக்கும் நோக்கில், வாக்காளர் தகவல் சீட்டு வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, வாக்காளரின் வரிசை எண், பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் காணும் வகையிலும், வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர் பெயரை வாக்காளர் பட்டியலில் விரைவாக கண்டறியவும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இதில் கியூ-ஆர் குறியீடும் இடம்பெற்றுள்ளது.
வரும் 17ஆம் தேதிக்கு முன்பாக, அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்பை விநியோகித்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது. பதிலாக, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 12 ஆவணங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் பிரிவு 135-8-ன் படி, தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.


