தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என்று தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் என்பது கவனிக்கத்தகுந்தது. திருவாரூரை அடுத்து ஜெயங்கொண்டம், திருவெறும்புதூர் ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரிக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி திருச்சியிலும், ஏப்ரல் 4இல் கரூர், திருப்பூரிலும், ஏப்ரல் 5 ஆம் தேதி நாகர்கோவில், திருநெல்வேலியிலும், ஏப்ரல் 7ஆம் தேதி கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்திலும் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஏப்ரல் 8ஆம் தேதி ஈரோடு, பரமத்திவேலூரிலும், ஏப்ரல் 9 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரியிலும், ஏப்ரல் 10 ஆம் தேதி வேலூர் மற்றும் ஆரணி ஆகிய தொகுதிகளிலும் அவர் பரப்புரை மேற்கொள்ள இருக்கின்றார். இதற்கு அடுத்தபடியாக ஏப்ரல் 11ஆம் தேதி சிவகங்கை, மதுரையிலும், ஏப்ரல் 12ஆம் தேதி விருதுநகர், சங்கரன்கோவிலிலும், ஏப்ரல் 13ஆம் தேதி தஞ்சாவூர், மயிலாடுதுறையிலும் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளார்.ஏப்ரல் 14ஆம் தேதி விழுப்புரம், நெய்வேலியிலும், ஏப்ரல் 15ஆம் தேதி ராணிப்பேட்டை, அணைக்கட்டிலும், ஏப்ரல் 16 கள்ளக்குறிச்சி. சேலம் ஆகிய தொகுதிகளிலும் முதலமைச்சர் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 17-இல் தேனி மற்றும் ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். ஏப்ரல் 18 அன்று ராமநாதபுரம் மற்றும் விளாத்திகுளத்திலும், ஏப்ரல் 19 ஆம் தேதி செங்கல்பட்டு மற்றும் பெரம்பலூரிலும், 21 -ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இறுதியாக அவரது கொளத்தூரிலும் தொகுதியில் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி ஏப்ரல் 2 முதல் 21 ஆம் தேதி வரை அவர் தொடர் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கின்றார். தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஏப்ரல் 6 -ம் தேதி, மு.க. ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல் தனது தேர்தல் பிரச்சாரம் பயணத்தை துவக்கி உள்ளார் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோன்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமிழ்நாடு முழுவதிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


