கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் ஈஸ்வரி (74) கடந்த 1.10.2023 அன்று அவரின் வீட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவர் கழுத்திலிருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் உத்தரவிட்ட தன்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்ட புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சேர்ந்த ரயாத்அலி மகன் யுனோஷ்உசேன்(22) மற்றும் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி மகன் மொகல்ஜாபர்(21) ஆகியோர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் மேற்படி நபர்கள் செட்டிபாளையம், பெருந்துறை போன்ற பகுதிகளில் இதுபோன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் தனிப்படையினர் மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் வழிப்பறி குற்றத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி யுனோஷ்உசேன்(22) மற்றும் மொகல்ஜாபர்(21) ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.


