கோவை – கேரளா எல்லைகளான வாளையாறு, வேலந்தாவளம் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இதில் கோவையிலிருந்து கேரளா செல்லும் வியாபாரிகளை குறிவைத்து அடிக்கடி வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எட்டிமடை பகுதியில் புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சுமார் 2 கோடி அளவிற்கான ஹவாலா பணம் பிடிபட்டுள்ளது. மேலும் பல வழிப்பறி சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவன நிதி பங்களிப்போடு கோவை – கேரளா எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் ஆகிய 2 எல்லைகளிலும் அதிநவீன வசதிகளுடான புதிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் வாளையாறு பகுதியில் ஏ.என்.ஆர் கேமரா பொருத்தப்பட உள்ளது. மேலும் இந்த இரண்டு சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் இருப்பதோடு அடிக்கடி வாகன சோதனைகளும் ஈடுபட உள்ளனர்.
மேலும்,இந்த நிகழ்ச்சியில் பேரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், கே ஜி சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் தங்கம் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


