கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கரூர் கூட்ட நெரிலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், வால்பாறை எம்எல்ஏவாக இருந்த அமுல் கந்தசாமி உள்ளிட்டோரின் மறைவுக்கும் பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாம் நாளான நாளை (அக்.15) 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும். மூன்றாம் நாள் (அக்.16) கூட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து, 4ஆம் நாள் (அக்.17) கூட்டத்தொடரில் 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை நடைபெறும். சட்டமன்ற கூட்டம் நடைபெறும் அக்.15, 16, 17 ஆகிய தேதிகளில், பேரவை துவங்கிய பின் வினாக்கள் – விடைகள் நேரம் இடம்பெறும். அதனை தொடர்ந்து 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்னறிவு பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாளைய பேரவை கூட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அதிமுகவில் செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளதால், பேரவையில் அவர் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


