2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தமிழ்நாடு டிஜிபி-யை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவி வகித்து வந்த நிலையில், அவரை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நாளை காலை 11 மணிக்கு சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்க உள்ளார்.மேலும், சஞ்சய் குமார் ஐபிஎஸ் தாம்பரம் காவல் ஆணையராகவும், அபிஷேக் தீக்ஷித் ஐபிஎஸ் மதுரை காவல் ஆணையராகவும், ஆர்.வி. ரம்யா பாரதி மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களும் நாளை காலை 11 மணிக்கு பொறுப்பேற்க உள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். அந்தவகையில், அருண் தம்புராஜ் சேலம் மாவட்ட ஆட்சியராகவும், விஷ்ணு மஹாஜன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.


