தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.75 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது வரை ரூ.75 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சியினை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஒரு வேட்பாளர் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காக செலவினம் மேற்கொள்ள இயலும். வேட்பாளரின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக, பல்வேறு தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் மட்டுமில்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்புக் குழுக்களும் இடம் பெற்றுள்ளன. இதில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறைகளும் உள்ளது.
தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழ்நாடு முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலை கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் வந்த பிறகு தமிழகத்தில் இதுவரை ரூ.23 கோடியே 74 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.23 கோடியே 19 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் இதர நகைகள், ரூ.61 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ரூ.21 கோடியே 96 லட்சம் மதிப்பிலான இலவச பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் என மொத்தமாக ரூ.75 கோடியே 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


