தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறும் என்றும், மே 04- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
234 பேரவை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 14- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் மே மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (மார்ச் 15) மாலை 04.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் டாக்டர்.சுக்பீர் சிங் சந்து, டாக்டர்.விவேக் ஜோஷி குழுவினர், தமிழ்நாடு உள்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தெரிவித்ததுடன், சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்தனர்.
ஒரே கட்டமாகத் தேர்தல்:
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறுகிறது; வாக்கு எண்ணிக்கை மே 04- ஆம் தேதி நடைபெறும்; அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வேட்பு மனுத்தாக்கல் எப்போது?
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 30- ஆம் தேதி தொடங்குகிறது; வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய ஏப்ரல் 06- ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் ஏப்ரல் 07- ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 09- ஆம் தேதி கடைசி நாளாகும். இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வரும் ஏப்ரல் 09- ஆம் தேதி வெளியிடப்படும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினருடன் துணை ராணுவப் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
100% வாக்குப்பதிவை உறுதிச் செய்யும் வகையில் நடவடிக்கை:
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதிச் செய்யும் வகையில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்ல தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்த தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.


