சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (28.11.2023) கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான கோவில்பாளையம் கருவலூர் சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சரத் சேதி மகன் ராஜ்கிஷோர்சேதி(33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் 250 கிராம் கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 560 நபர்கள் மீது 426 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 710.411 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


