கோவை சிங்காநல்லூர் அடுத்த SIHS காலனியில் ரயில்வே தண்டவாளம் செல்வதால் அதனை கடப்பதற்கு உயர்மட்ட மேம்பாலம் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ரயில்வே தண்டவாளத்திற்கு கீழ் சுரங்க வழி அமைத்து தரப்பட்டது. ஆனால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி விடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். எனவே உயர்மட்ட மேம்பாலம் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்த நிலையில் 2010ம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் போது அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் நிலங்கள் கையப்படுத்தப்பட்டு 2013ம் ஆண்டு மேம்பால வேலைகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது.
இதனிடையே நிலம் கையகப்படுத்தும் பொழுது உரிமையாளர்களுக்கு போதிய தொகை கிடைக்காத காரணத்தினால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது முடிவுக்கு வந்தது. மேலும் மேம்பால பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்றது. அதனால் அந்த மேம்பால பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். பின்னர் 2021ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சியில் மேம்பால பணிகள் முடிவடைந்தது. சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு 55.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு முடிக்கபட்ட இந்த மேம்பாலத்தை, இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.



