கோவையின் புதிய அடையாளமாக மாறியுள்ள ஜி.டி.நாயுடு பெயரிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதனால் கோவை நகரில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல முன்பு 45 நிமிட பயணம் அமையும். ஆனால் இனி 10 நிமிடங்களாக குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவையில் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. கோவையில் அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலமாக இது அமைந்துள்ளது. தமிழகத்தின் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிமீ தூரத்திற்கு உள்ள நிலையில், இது அதைவிட பெரியதாக 10.1 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிக நீளமான இந்த உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இந்த பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தினை, முதல்வர் ஸ்டாலின் கோல்டு வின்ஸ் பகுதியில் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காரில் பயணித்தபடி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மக்களை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கையசைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த பாலம் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாலம் திறப்பு விழாவையொட்டி நேற்று இரவு மேம்பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
4 வழித்தட உயர்மட்ட 8 வழித்தடங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்ததின் மூலம், நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி ஆகிய பகுதிகளுக்கும் இனி விரைவாக செல்ல முடியும். தமிழ்நாட்டில் முதல் முறையாக, பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் மேம்பாலத்தில் செய்யப்பட்டுள்ளன. தற்போது கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்ல சுமார் 10 கிமீ தூரத்தை கடக்க குறைந்தது 45 நிமிடங்கள் ஆகிறது. ஆனால் இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்ததால், 10 நிமிடங்களில் செல்ல முடியும். விமான நிலையம், கொடிசியா, ஹோப் காலேஜ், நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், அண்ணா சிலை மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய சந்திப்புகளில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
தற்போது பொதுமக்களின் வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. திறப்பு விழாவையொட்டி மேம்பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


