சிறுவாணி சாலையில் அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நண்பர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், கோவை செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவற்காக ஒதுங்கிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த நண்பர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருந்த இரண்டு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். படுகாயங்களுடன் போராடி வரும் மற்றோருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பேரூர் போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரீஷ், பிரகாஷ் மற்றும் திருச்சியை சேர்ந்த சபா ஆகிய மூன்று பேரும், பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள தனியார் வாட்டர்வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத்துறை 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களான, தஞ்சையை சேர்ந்த பிரபாகரன் மற்றும் அரியலூரை சேர்ந்த அகத்தியன் ஆகியோரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில், நேற்று ஹரீஷ் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 5 பேரும், வாட்டர் வாஷ் செய்வதற்காக வந்த காரை எடுத்துக் கொண்டு பேரூர் பகுதிக்கு சென்றனர்.
அங்கு பிறந்தாளை கொண்டாடி விட்டு மீண்டும் பணிபுரியும் இடத்திற்கு காரில் வந்தனர். அப்போது காரை பிரகாஷ் ஓட்டி வந்தார். இதில், கார் பேரூரை அடுத்த செட்டிபாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக இடது புறம் ஒதுங்கியது. இந்த சமயத்தில், ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணித்த ஹரீஷ், பிரகாஷ், அகத்தியன், சபா ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பிரபாகரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்ற நண்பர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சாலையோரம் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


