கோவை சுங்கம் பகுதியில் இந்திய கட்டடக்கலை வல்லுனர்கள் குழுமம் சார்பில் கட்டடக்கலை கண்காட்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறுகையில், ”ஸ்மார்ட் சிட்டி திட்டம் பிரதமர் மோடியின் சிந்தனையில் உருவான அற்புதமான திட்டம். இந்தியாவிலேயே அதிகமான ஸ்மார்ட் சிட்டிகள் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அதிலும் கோவையில் 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் இருக்கக்கூடிய பல்வேறு விஷயங்களை எடுத்து புதிதாக கல்வி கொள்கை திட்டத்தில் செயல்படுத்துகிறோம் என்று திராவிட மாடல் அரசு கூறுகிறது. தமிழ்நாடு கல்வியில் சிறந்தது என்று மாநாடு நடத்துகிறார்கள். அதே சமயம் பல்வேறு பள்ளிக்கூடங்கள் மூடப்படுகிறது. சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் அரசாங்கத்தில் சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டு வருகிறது” என்றார். பல்கலைக்கழகங்கள் மசோதா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு மசோதாவை கொண்டு வருவதற்கு முன் கலந்துரையாடி கொண்டு வர வேண்டும். அவசரகதியில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதும், அதன் பிறகு கூட்டணி கட்சிகள் எல்லாம் கூறியதை அடுத்து அதனை வாபஸ் பெறுவதும் என தமிழக அரசு டிராமா போடுகிறது” என்றார்.கரூர் சம்பவம் தொடர்பாக பேசிய அவர், “கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் குறைந்தபட்சம் மக்களை பார்க்கிறார் என்பதே நல்ல விஷயம் தான். சிபிஐ விசாரணை முடிந்து உண்மை வெளிவரும் பொழுது நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

PM SHRI திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு கூடிய விரைவில் இணையும். கேரள மாநிலம் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று ஏற்றுக் கொண்டார்கள். தமிழக அரசும் இதனை ஏற்றுக் கொள்கின்ற காலம் நிச்சயம் வரும். கல்வியில் அரசியலை கலக்க வேண்டாம். யதார்த்தத்தை புரிந்து கொண்டு அந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என்ற கருத்து அபாண்டமான குற்றச்சாட்டு. நாட்டில் அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக செயல்படலாம். யாரும் யாரையும் முடக்க முடியாது” என்றார்.


