அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே மக்களிடையே பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியை ஒதுக்கவில்லை, மறுபக்கம் பாஜகவிற்கு கோவை வடக்கு தொகுதியை ஒதுக்கி உள்ளார். அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகிய இருவருக்குமே கோவை வடக்கு தான் ஒரே ஆப்சன், மறுபக்கம் செந்தில் பாலாஜி கோவைக்குள் வந்துள்ளார். இதனால் என்னாகும் என்பதை பார்ப்போம்.
இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜகவிற்கு ஒதுக்கிய 27 தொகுதிகளில் நான்கு தொகுதிகள் மட்டும் தான் பாஜகவிற்கு மிகவும் எளிதான தொகுதிகள், மற்ற தொகுதிகள் எல்லாம், திமுகவின் மிகவும் வலுவான செல்வாக்கு உள்ள தொகுதிகள். அதில்வெற்றி பெறுவது மிக மிக சவாலானது. தற்போதைய நிலையில் கோவை தெற்கு (ஏற்கனவே வானதி சீனிவாசன் ஜெயித்தது), நெல்லை (நயினார் நாகேந்திரன் செல்வாக்கு), கன்னியாகுமரி/நாகர்கோவில் (பாஜக-வின் பாரம்பரிய கோட்டை), மொடக்குறிச்சி (பாஜகவின் சரஸ்வதி ஜெயித்த இடம்), இதில் கோவை தெற்கு இந்த முறை ஒதுக்கப்படவில்லை. கோவை வடக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் பாஜகவிற்கு சாதகமானது தான்.ஆனால் இதனைவிட சாதகமான சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட சில தொகுதிகள் உள்ளன. ஆனால் அவற்றை எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு ஒதுக்கவில்லை, இதன்மூலம் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தாலும், கோயம்புத்தூர் மண்டலத்தில் தனது பிடியை தளர்த்த எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
கோவை வடக்கு சிக்கல் என்ன
பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை மற்றும் பாஜக மகளிரணி தேசிய தலைவியான வானதி சீனிவாசன் ஆகிய இருவருமே கோவை வடக்கு தொகுதியைத்தான் கேட்கிறார்கள். இருவரையும் ஒரே தொகுதியில் மோத விடுவதன் மூலம், பாஜக-விற்குள் இருக்கும் விரிசலை அவர் ஊதிப் பெரிதாக்கி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் யாரை தேர்வு செய்வது என்பது தான் பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதத்திற்கு காரணம் என்கிறார்கள். அதேபோல் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்புள்ள கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் போன்ற தொகுதியை தராமல் (நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள்) அவருக்குச் சவாலான தொகுதிகளை மட்டும் ஒதுக்கியிருப்பது, அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கை அவரது சொந்த மண்டலத்திலேயே முடக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாக அண்ணாமலை ஆதரவாளர்கள் விமர்சிக்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமியின் வியூகம் ஒருபுறம் எனில், கரூரைவிட்டு விட்டு, கோவை தெற்கில் செந்தில் பாலாஜி மீண்டும் களமிறங்குவது அதிமுகவின் கொங்கு மண்டல கோட்டைக்கு மட்டுமல்ல.. பாஜக-விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜிவின் அதிமுகவின் அத்தனை வியூகங்களும் நன்றாகவே தெரியும். எனவே அவர்களை வியூகத்தை முறியடித்து கொங்கு மண்டலத்தில் திமுக-வின் தேர்தல் வியூகத்தை மிகத் தீவிரமாக முன்னெடுப்பார். எனவே செந்தில் பாலாஜியின் வருகை பாஜக மற்றும் அதிமுக-வின் ஓட்டு வங்கியில் அவர் பெரிய ஓட்டையைப் போட வாய்ப்புள்ளது. குறிப்பாக, பண பலம் மற்றும் ஆள் பலத்தில் செந்தில் பாலாஜியைச் சமாளிப்பது பாஜக-விற்கு எளிதான காரியமல்ல. இதுதான் தற்போதைய சிக்கலை இன்னும் அதிகமாக்க போகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..


