விஜய்யுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆதவ் அர்ஜுனா யார் என்று எனக்கு தெரியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து கேட்டதற்கு பியூஸ் கோயல் வரும்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தொகுதி பங்கீடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யவும் 10 நாட்கள் அவகாசம் உள்ளது” என்றார்.
ED, IT ஆகியவற்றை வைத்து மத்திய அரசு மிரட்டுவதாக எழும் புகார்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “அமலாக்கத்துறை, வருமானத்துறை போன்றவை சுதந்திரமான அமைப்பு. அவற்றை வைத்து மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அமலாகத்துறை விஷயங்களில் சிக்கியவர்கள் மீதுதான் விசாரணை நடத்தப்படும். கடந்த தேர்தலுக்கு முன்பிருந்தே அமலாக்கத்துறை விசாரணை நடக்கும் அனைவர் மீதும் வழக்கு உள்ளது. விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே திமுக அமைச்சர்கள், விஜய் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை வழக்குகள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர்கள் மீது வழக்கு இருக்கும் சூழலில், இப்போது அதை வைத்து நாங்கள் மிரட்டுவதாக சொன்னால் சரியானதாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பரவிய வதந்திகளுக்கு விளக்கமளித்தார் நயினார் நாகேந்திரன். “தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் நீங்கள் சொல்லும் யாருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விஜய் கட்சியிலிருந்தும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்று கூறினார்.
80 தொகுதிகள், துணை முதல்வர் போன்ற ஆஃபர்கள் கொடுப்பதாக சொன்னதாக ஆதவ் அர்ஜுனா சொல்கிறாரே என கேட்டதற்கு, “ஆதவ் அர்ஜுனா என்பவர் யார் என்றே தெரியாது” என்றார்.ஜனநாயகன்’ படத்திற்கு நெருக்கடி கொடுப்பது பாஜக தான் என்று பரவும் செய்திகள் குறித்து கேட்டபோது, “மத்திய அரசின் அமைப்புகளை நாங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவை அனைத்தும் சுதந்திரமான அமைப்பு. அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமே விசாரணை நடத்தப்படும்” என்று பதிலளித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரை குறித்த கேள்விக்கு, “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளுக்கு வரவுள்ளார். அவர் வரும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபீன் என அகில இந்திய தலைவர்கள் பலரும், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் போன்றோரும் தேர்தல் பரப்புரைக்காக வரவுள்ளனர்” என்றார்.
திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து கேட்டதற்கு, “திமுக கூட்டணி கட்சிகளின் சீட்டு குறைக்கப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்கிறார்கள். திமுக கூட்டணி கட்சிகளுக்கான சீட்டை மக்களும் குறைப்பார்கள். பாஜக சாதி, மதத்தை சார்ந்துள்ள கட்சி கிடையாது. மதம் சார்ந்த கட்சி என்றால் அது திமுக தான். அதனை மறுப்பு இல்லாமல் பகிரங்கமாக சொல்ல முடியும். இந்துக்கள் வாக்குகள் எங்களுக்கு வேண்டாம் என முதலமைச்சர் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளின் நிகழ்வுகளில் நேரடியாக பங்கேற்கிறோம். இந்த நல்ல நாளில் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சுபகாஞ்சலூ யுகாதி சால சந்தோசம்” என தெலுங்கில் வாழ்த்து தெரிவித்தார். புதிய கட்சிகள் உங்கள் கூட்டணிக்கு வருகிறதா என்ற கேள்விக்கு, “இப்போதுதான் பதில் சொல்லியுள்ளேன். சால சந்தோசம்” என கூறிவிட்டு சென்றார்.


