நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் விவகாரத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்து விசாரிக்க வேண்டும். மேலும் ஈபிஎஸ் தலைமைத் தாங்குவது உண்மையான அதிமுக இல்லை. கட்சியின் உண்மை நிலையை நிரூபிக்க அவகாசம் தேவை என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏ-வுமான செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அதிரடியாக நீக்கினார். எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனருக்கும் கடந்த ஓராண்டு காலமாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே தான் பொறுப்பு வகித்துவரும் நிலையில், கட்சி சார்பில் எடுக்கப்படக்கூடிய முக்கிய முடிவுகளில் தனது தலையீடு இல்லையே என்ற எண்ணம் செங்கோட்டையனுக்கு வெகு நாட்களாக இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதுபோன்ற பல நிகழ்வுகளால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் செங்கோட்டையன் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அன்று, இராமநாதபுரத்தில் நடைபேற்ற முத்துரமலிங்க தேவரின் குருபூஜையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வாகனத்தில் அவருடன் ஒன்றாக வந்த செங்கோட்டையன், அவர்களுடன் ஒன்றாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார்.

இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையன் இணைந்து பயணித்து, அதிமுகவை எடப்பாடியிடம் இருந்து மீட்கப் போவதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக அதிமுகவின் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கட்சி விதிகளை முறையாக பின்பற்றாமல் தன்னை நீக்கிவிட்டதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது எடப்பாடி மீது செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.


