கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், நேற்று கடும் வன்முறை வெடித்தது.
பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான பொதுமக்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீடு மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த பல எம்.பி.க்கள் மற்றும் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக காணப்படும் சூழலில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.
பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் சொகுசு வீட்டை விட்டு வெளியேறிய ராஜபக்சே வேறு ஒரு இல்லத்தில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச்செல்லலாம் எனவும் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


